காலநிலை மாற்றம்: உலக தலைவர்களுக்கு ஐ.நா பொதுச் செயலாளர் கடும் எச்சரிக்கை...!


காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில் உலக நாடுகள் உடனே சேர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் பேரழிவைச் சந்திக்க நேரும் என்று ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரித்துள்ளார்.

எகிப்தில் நடைபெறும் உலகப் பருவநிலை மாநாட்டில் உலகத் தலைவர்களுக்கு முன் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

காலநிலை மாற்றம் எனும் போர்க்களத்தில் உலகம் தோற்றுக் கொண்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

பழைய புகை கக்கும் எரிசக்தியைக் கைவிட்டு இயற்கையைக் காக்கும் புதிய எரிசக்திக்கு மாறும்படி அவர் உலகத் தலைவர்களைக் கேட்டுக் கொண்டார்.

காலநிலை மாற்றம் எனும் நரகத்தை நோக்கிச் செல்லும் அதிவேகப் பாதையில் உலகம் வேகமாகப் பயணம் செய்து கொண்டிருப்பதாக அவர் எச்சரித்தார்.

இந்நிலையில் மனிதர்களுக்கு இரண்டு தெரிவுகள் உள்ளன என்று கூறிய குட்டரெஸ், பருவநிலை மாற்றத்தைச் சமாளிப்பது குறித்து ஒத்துழைப்பது அல்லது ஒழிந்துபோவது என்று அந்த 2 தெரிவுகளை முன்வைத்தார்.

எகிப்தில் ஷார்ம் அல் ஷெய்க் நகரில் நடைபெற்று வரும் காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா மாநாட்டில் 100க்கும் அதிகமான உலகத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில் பசுமையில்ல வாயுக்களின் உமிழ்வை குறைப்பதற்கான அழுத்தம் அதிகரித்திருப்பதோடு வெப்பநிலை அதிகரிப்பால் பாதிப்பை சந்தித்திருக்கும் வளர்ந்துவரும் நாடுகளுக்கு நிதி உதவி அளிப்பது குறித்து வலிறுத்தப்பட்டு வருகிறது.

Post a Comment

Previous Post Next Post