கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (09.11.2022) காலை 9 மணியளவில் திடீரென கணனி அமைப்பில் கோளாறு ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் தங்களுடைய தேவைகளைப் பூர்த்திச் செய்துக்கொள்வதற்காக, கட்டுநாயக்க விமான நிலையத்தின் பிரதான காரியாலயத்துக்கு வருகை தரும் விமானப் பயணிகள் அமைதியற்ற முறையில் நடந்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து அந்தப் பிரிவுக்குள் காவல்துறையினர் அழைக்கப்பட்டு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
குடிவரவு கருமபீடத்தில் நீண்ட மக்கள் வரிசை
விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவில் உள்ள கணனி அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதன் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்கான குடிவரவு மற்றும் குடியகல்வு நடவடிக்கைகள் தற்போது செயல்முறையாகவே மேற்கொள்ளப்படுகிறது.
இதன் காரணமாகவே விமான நிலைய குடிவரவு கருமபீடத்தில் பெரும் வரிசைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் கணனி அமைப்பு கோளாறு சரிபார்க்கப்படும் வரை பயணிகளுக்கான குடிவரவு மற்றும் குடியகல்வு நடவடிக்கைகள் செயல்முறையாகவே முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் குடிவரவு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பியுமி பண்டார தெரிவிக்கையில், தற்போது ஏற்பட்டுள்ள கோளாறை திருத்தும் பணிகளில் கணினி பொறியலாளர்கள் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment